
பாதசாரிகள் கவனம் ! அரசின் பாக்கெட்கள் கவனம்.
கிரானைட் கல் திருட்டு
- By --
- Monday, 11 Nov, 2024
புதுச்சேரி: சுற்றுலாத்துறை மூலம் ரூ. 95 கோடி மதிப்பில் பிளாட்பாரத்தில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களை மர்ம நபர்கள் தோண்டி எடுத்து திருடிச் சென்று வருகின்றனர்.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவருவதிற்காக, ஒயிட் டவுன் அனைத்து வீதிகளின் பிளாட்பாரங்கள் கிரானைட் கல் பதிக்கும் திட்டம் கடந்த காங்., ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
சுற்றுலாத்துறை மூலம் ரூ. 95 கோடி மதிப்பில் கடற்கரை சாலை முதல் ஆம்பூர் சாலை வரை உள்ள துய்மா வீதி, ரோமண்ட் ரோலண்ட் வீதி, கொம்பாங்கி வீதி, செயின் மார்ட்டின் வீதி, செயின்ட் லுாயிஸ் வீதி, மரைன் வீதி, துபே வீதி, சுய்ப்ரேன் வீதி என அனைத்து வீதிகளின் பிளாட்பாரங்கள் கிரானைட் கல் பதிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறையின் நிதியின் மூலம் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிட பிரிவு கிரானைட் கல் பதிக்கும் பணியை மேற்கொண்டது. இதில், எந்த இடத்திலும் கிராணைட் கல் முழுமையாக பதிக்கப்படவில்லை.
பிளாட்பார மரங்களை சுற்றி சரிவர கிரானைட் கல் பதிக்காமல் அலங்கோலமாக கல் பதித்தனர்.
இந்த நிலையில், செஞ்சி சாலையில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களை மர்ம நபர்கள் தோண்டி எடுத்து வீட்டின் கட்டுமான பணிக்கு திருடி சென்று வருகின்றனர். செஞ்சி சாலை பஜார்செயின்ட் லேரண்ட் வீதி சந்திப்பு அருகே சாலையோர பிளாட்பாரத்தில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களை கடந்த 2 நாட்களாக மர்ம நபர் பட்ட பகலில் தோண்டி எடுத்து திருடிச் சென்றுள்ளனர்.
இதுபோல் பல இடங்களில் கிரானைட் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை கவனிக்கவில்லை. கிரானைட் கல் திருடப்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் தான் பொதுப்பணித்துறையின் அனைத்து அலுவலகங்களும் உள்ளது குறிப்பிடதக்கது.
@வண்ணப்பலகை
( 11,நவம்பர், 2024)