
சமூக விமர்சனம்
சகஜமாகி விட்ட சமூக ஊடகங்கள்
- By --
- Friday, 01 Nov, 2024
சமூக ஊடகங்கள் நம் அனைவரின் வாழ்க்கையையும் ஒரே புரட்டாகப் புரட்டிப் போட்டு விட்டது.
ஒவ்வொரு தனி நபருக்கும் தனித் தனியான உலகத்தை அது உருவாக்கிக் கொடுத்து விட்டது. அந்த மெய் நிகர் உலகில் தான் இன்றைய புதிய தலைமுறை உலகம் சுற்றிச் சுழன்று கொண்டுள்ளது. இந்தக் கற்பனைக் குதிரையின் காலடியோசையில் தான் இங்கு ஒவ்வொரு காலைப் பொழுதுகளும் புலர்ந்து கொண்டிருக்கிறது..
*எல்லைகளற்ற உலகம்...*
தகவல் தொழில் நுட்ப உலகமானது அதன் ஒவ்வொரு மைக்ரோ நொடியிலும் தன்னை மென்மேலும் புதுப் பித்த வண்ணமாய் முன்னேறிச் சென்று கொண்டேயிருக்கிறது. அதன் பாதையும் பயணமும் நம்முடைய வழக்கமான எட்டுத் திசைகளையும் எண்ணாயிரம் திசைகளாகப் பிரித்து விட்டது. நமது அன்றாடப் பொழுதுகள் ஒவ்வொன்றும் அந்த எண்ணாயிரம் திசைகளின் ஊடாக மிக லாவகமாய் ஊடுருவிச் சென்று கொண்டேயிருக்கிறது. இந்த அதி நவீன மற்றும் அதி விரைவுத் தொழில் நுட்பங்கள் கொண்ட இணைய வெளி உலகமானது நமது வழக்கமான காலம் சார்ந்த சமன்பாடுகளை, நிமிடச் சிமிழ்களுக்குள் சிறை பிடித்து விட்டது. குறிப்பாக, தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்கள் நம்முடைய ஒவ்வொரு மணி நேரத்தையும் செய்திகளாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இணைய வெளி உலகமானது, நம் ஒவ்வொருடைய நொடிகளையும் செய்திகளாக மாற்றிக் கொண்டே முன் செல்கிறது. இதனால் சமூக வெளியிலும் அரசியல் வெளியிலும் அதற்கேற்ப பல முரண்பாடுகள் சங்கிலித் தொடராய் உருவாகி வருகின்றன. அதே போன்று, இந்த அதிவிரைவுத் தன்மையானது ஒவ்வொரு தனி மனிதனையும் கடுமையாக பாதிக்கிறது.
*தேய்ந்து மறையும் காலம்*
இன்றைய தேதியில் சர்வதேச சமூகத்தையும் தலை குனிய வைத்துள்ள ஒரே பிரச்சனை இந்த ஸ்மார்ட் போன்கள் தான். ஆம் ! உலகெங்கிலும் உள்ள ஆன்ட்ராய்டு பயனாளர்கள் அனைவருமே குனிந்த தலை நிமிராமல் தங்களின் செல்போன்களுடன் தான் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வீடுகள், அலுவலகங்கள், வர்த்த நிறுவனங்கள், பொது இடங்கள், போக்குவரத்து வாகனங்கள், நடக்கும் சாலைகள் - என எல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
இதனால் உற்பத்தி திறன்களில் கடும் பாதிப்புகள் ஏற்ப்பட்டு வருகின்றன.
மனித நேரங்கள் மணிக் கணக்கில் வீணாகிக் கொண்டிருக்கிறது.
கல்விக் கூடங்களில் உள்ள மாணவ- மாணவியர்கள் தங்களின் படிப்புகளை எல்லாம் மறந்து விட்டு இந்த செல்போன்களே கதி எனக் கிடக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இன்றைய படித்த
மக்கள் திரும்பப் பெற முடியாத தங்களின் நேரத்தையும், காலத்தையும் இப்படி மணிக்கணக்கில் தேய்த்து வீண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும், வாட்ஸ் அப் போன்ற செயலிகளில் வெட்டி அரட்டைகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அதே போல முகநூல் பக்கங்களில், குனிந்தால் ஒன்று நிமிர்ந்தால் மற்றொன்று என நொடிக்கு ஒரு போஸ்ட்டிங்கைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.
இது போதாதென்று டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், மெசஞ்சர் என்ற ஏகப்பட்ட சிற்றரசர்கள் வேறு அவ்வப்போது இவர்கள் மீது படையெடுத்து வந்து விடுகின்றனர்.
இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இவர்களின் பொழுதுகள் எல்லாம் வீணில் வடிந்து கொண்டிருக்கின்றன. காலம் மட்டுமா வீணாகிறது ! கையில் உள்ள இருப்பும் சேர்ந்தே கரைகிறது. ரீஜார்ஜ், நெட் பேக், என சம்பாத்தியத்தில் பெரும் பகுதிகள் காற்றில் கரைந்து வருகின்றன. இதை எப்படிச் சமாளிப்பது என யாருக்கும் விடை தெரியவில்லை.
இப்பொழுதெல்லாம் வணிக நிறுவனங்களுக்கு சிப்பந்திகளை வேலைக்குச் சேர்க்கும் பொழுதே ஒரு கண்டிஷனைப் போட்டு விடுகிறார்கள். சதா செல்போனை நொண்டாத ஆட்களையே அவர்கள் வேலைக்குச் சேர்க்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த செல்போன்களின் குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இந்த செல்போன் ஸ்மார்ட் போன்களால் நமக்கு இழப்புகள் மட்டும் தான் ஏற்ப்படுகிறதா ? ஏன் இதில் எந்த வகையான நன்மைகளும் கிடையாதா ? என்ற உங்களின் நியாயமான கேள்விகள் என் காதில் விழாமல் இல்லை.
ஒரு நவீன கண்டுபிடிப்பின் நன்மையும், தீமையும் அதனை பயன் படுத்தும் நம் கையில் தான் உள்ளது.
ஷரீப். அஸ்கர் அலி
நன்றி:
"வளர் தொழில்"
மாத இதழ். (அக்டோபர்-2018)